உதய கம்மன்பிலவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

போலியான அட்டோனி பத்திரத்தை சமர்ப்பித்து அவுஸ்திரேலிய பிரஜை ஒருவருக்கு சொந்தமான 21 மில்லியன் ரூபா பெறுமதியான நிறுவனப் பங்குகளை முறைகேடாகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில உள்ளிட்ட இரண்டு பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் எழுத்துமூல ஆட்சேபனைகளை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ​​பிரதிவாதி உதய கம்மன்பில நீதிமன்றத்தில் ஆஜராகியதுடன், மற்றைய பிரதிவாதியான சிட்னி ஜயரத்ன உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருப்பதாக அவரது சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

இதன்போது சமர்ப்பிக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பான எழுத்துப்பூர்வ ஆட்சேபனைகளை எதிர்வரும் நவம்பர் மாதம் 25 ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு பிரதிவாதிகளுக்கு உத்தரவிட்டது.

1996 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி முதல் 1997 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 25 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த குற்றத்தை செய்ததாக குற்றம் சுமத்தி உதய கம்மன்பில உள்ளிட்ட இரு பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.