ரயில் மோதியதில் பலியான காட்டு யானைகள்!

கொலன்னாவை எண்ணெய் சேமிப்பு நிலையத்திலிருந்து  மட்டக்களப்பு நோக்கி எரிபொருளை ஏற்றிச் சென்ற ரயிலில் காட்டு யானைக் கூட்டம் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

கல்லோயா – ஹிங்குரான்கொடை  ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (18) அதிகாலை 3.30 மணியளவில்  இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த  விபத்தில் இரண்டு காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பல காட்டு யானைகள் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளது.

ரயிலின் நான்கு எரிபொருள் தாங்கிகள் தடம்புரண்டுள்ளதுடன் இரண்டு எரிபொருள் தாங்கிகள் கவிழ்ந்துள்ளது. அத்துடன் ரயிலின்  இயந்திர சாரதி மற்றும் கட்டுப்பாட்டாளர் பயணித்த ரயில் பெட்டிகளும்  தடம்புரண்டுள்ளன.

இதேவேளை,  மட்டக்களப்பு – கொழும்பு பிரதான மார்க்கத்தில் இயங்கும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதுடன்  இன்று காலை கொழும்பு கோட்டையிலிருந்து – மட்டக்களப்பு வரை இயக்கப்படவிருந்த ரயில் சேவையையும், மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி இயக்கப்படவிருந்த ரயில் சேவையையும் இரத்து செய்ய ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.