கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி செலுத்திய மாணவிகள் வைத்தியசாலையில்!

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்கான HPV தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் சுகவீனமடைந்த 12 வயதுடைய பாடசாலை மாணவிகள் 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்குருவத்தோட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அங்குருவத்தோட்ட வெனிவெல்பிட்டிய கனிஷ்ட வித்தியாலயத்தில் ஏழாம் தரத்தில் கல்வி கற்கும் ஐந்து மாணவிகளே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மில்லனிய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் அதிகாரிகள் குழுவொன்று வந்து அந்தப் பாடசாலையில் ஏழாம் ஆண்டில் கல்வி கற்கும் 26 மாணவிகளுக்கு இந்த தடுப்பூசியை செலுத்தியிருந்தது.

தடுப்பூசி செலுத்தப்பட்டு சிறிது நேரத்திலேயே, ஐந்து மாணவிகளுக்கு தலைவலி, வயிற்று வலி, மயக்கம் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டதையடுத்து, மில்லனிய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரிகள் நோய்வாய்ப்பட்ட மாணவர்களை ஹல்தொட்ட பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

அவர்களுக்கு அந்த வைத்தியசாலையில் ஆரம்ப சிகிச்சை அளிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக ஹொரணை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவிகள் தற்போது ஹொரணை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக ஹொரணை வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

நோய்வாய்ப்பட்ட அனைத்து மாணவிகளும் வெனிவெல்பிட்டி பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸாருக்கும் முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதுடன், அங்குருவத்தோட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆனந்த சில்வாவின் பணிப்புரையின் பேரில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.