கோர விபத்தில் இருவர் பலி!

கம்பளை நகரில், கம்பளை திசையிலிருந்து நாவலப்பிட்டி திசை நோக்கி பயணித்த ஜீப் வண்டி ஒன்று, முன்னால் பயணித்த முச்சக்கரவண்டியுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

இந்த விபத்து நேற்று (13) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முன்னால் சென்ற முச்சக்கரவண்டி மீது ஜீப் வண்டி மோதியதில் முச்சக்கரவண்டி கவிழ்ந்து அதில் இருந்து சாரதியும் குழந்தையும் தூக்கி வீசப்பட்டனர்.

பின்னர் ஜீப் வண்டியும் முன்னால் ஓடி வீதிக்கு அருகில் இருந்த வர்த்தகம் செய்யும் வண்டியுடனும் மற்றுமொரு முச்சக்கர வண்டியுடனும் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி, சிறுவன் மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த ஒருவரும் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் குழந்தை உயிரிழந்தது.

சம்பவத்தில் கம்பளை, இல்லவத்துர பகுதியைச் சேர்ந்த  மூன்றரை வயதுடைய ஆண் குழந்தையே உயிரிழந்தது.

விபத்துடன் தொடர்புடைய ஜீப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் களுவாஞ்சிகுடி ஓந்தாச்சிமடம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு திசையில் இருந்து கல்முனை திசை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்து சென்று வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி மற்றும் துவிச்சக்கர வண்டியுடனும் மோதியுள்ளது. 

நேற்று (13) காலை இடம்பெற்ற இந்த விபத்தில் சாரதியும், பின்னால் அமர்ந்து சென்றவரும் துவிச்சக்கர வண்டி செலுத்துனரும்  படுகாயமடைந்த நிலையில், களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் மோட்டார் சைக்களின் பின்னால் அமர்ந்து சென்றவர் உயிரிழந்தார்.

சாரதி மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தாந்தாமலை, கொக்கட்டிச்சோலை பிரதேசத்தை சேர்ந்த 17 வயதுடைய இளைஞரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.