நாட்டில் புற்று நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு!

இலங்கையில் வாய்ப் புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோய்கள் பதிவாகும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்தில் மாத்திரம் 33,000க்கும் அதிகமான புற்று நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் பாலித மஹிபால சுட்டிக்காட்டியுள்ளார்.

புற்றுநோயால் கடந்த வருடம் 19,000 பேர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய், நுரையீரல் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஆகியவை இந்த நாட்டில் புற்றுநோய் இறப்புகளுக்கு முக்கிய காரணங்களாகும் என சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

ஆண்களிடையே வாய்ப் புற்றுநோய் அதிகரித்து வருவதுடன், நாட்டின் சனத்தொகையில் 100,000 பேரில் 1,990 பேர் வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

ஆரோக்கியமான வாழ்க்கை முறைமையை ஊக்குவிப்பதன் மூலம் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கையை குறைக்க முடியும் எனவும் புற்றுநோய் சிகிச்சையின் தரத்தை உயர்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.