ஓய்வை அறிவித்த கெஹலிய!

கண்டி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தீவிர அரசியலில் இருந்து தற்காலிகமாக ஓய்வு பெற தீர்மானித்துள்ளார்.

தனது எதிர்கால அரசியல் பயணம் குறித்து ஆதரவாளர்களுக்கு அறிவிப்பதற்காக கண்டியில் இன்று (13) நடைபெற்ற கூட்டத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில், தான் அரசியல் அனாதை இல்லை. அரசியலில் இருந்து தற்காலிகமாக ஓய்வு பெறுவதாக அறிவித்தாலும் மக்களின் ஆதரவு அப்படியே உள்ளது என்றார்.

ஒரு வர்த்தகராக தாம் சம்பாதித்த பணத்தை விட அரசியலில் ஈடுபட்டு பெறப்படும் மக்களின் அன்பு மதிப்புமிக்கது என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும், நீதிமன்றத்தின் மூலம் நீதி கிடைக்கும் என்ற உறுதியான நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும், நிரபராதியாக அரசியலுக்கு வருவேன் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

“சுமார் 31 ஆண்டுகளுக்கு முன்பு, நான் தற்செயலாக அரசியல்வாதி ஆனேன்.

எனது தாத்தா, பண்டாரநாயக்காவின் செனட்டில் இருந்தார்.

எனக்கு கெஹலிய என்ற பெயரை பண்டாரநாயக்கவே வைத்தார்.

தீவிர அரசியலில் ஈடுபட எனக்கு விருப்பம் இல்லை. நான் ஒரு நல்ல வெற்றிகரமான வர்த்தகர்”.

“அரசியலோ இல்லையோ, எந்த நேரத்திலும் உதவி செய்ய காத்திருக்கினேறன்.

இது வெற்று வார்த்தைகளால் சொல்லப்பட்ட ஒன்றல்ல, இதயத்தில் இருந்து சொல்லப்பட்டது”. என்றார்.

கெஹலிய ரம்புக்வெல்ல ஊடகத்துறை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் நலன்புரி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு, சுகாதாரம் மற்றும் சுற்றாடல் உள்ளிட்ட பல்வேறு அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.