யாழில் கடையில் போதை மாத்திரைகளை விற்றவர் கைது!

யாழ்ப்பாணத்தில் பலசரக்கு கடையொன்றில் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த கடை உரிமையாளர் பொலிஸாரினால் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

இணுவில் வீதி மானிப்பாயில் பலசரக்கு கடையொன்றில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில், குறித்த கடையினை பொலிஸார் சோதனையிட்டனர்.

சோதனையின் போது கடையின் பின் பகுதியில் இருந்து 50 மாத்திரைகளும் , ஒரு தொகை வெற்று மாத்திரை அட்டைகளும் காணப்பட்டுள்ளன.

அதனை அடுத்து உரிமையாளரை கைது செய்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த வேளை , தான் போதை மாத்திரைகளை உட்கொள்வதாகவும் , தெரிந்த நபர்களுக்கு மாத்திரம் அவற்றை விற்பனை செய்வதாகவும் , கூறியுள்ளார்.

அத்துடன் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் 150 மாத்திரைகளை வாங்கி வந்ததாகவும் , அவற்றில் சிலதை விற்று விட்டதாகவும் , ஏனையவற்றை தானே உட்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.