யாழ் நெல்லியடி ஆடையகத்திற்கு தீ வைத்த சந்தேக நபர் கைது!

யாழ்ப்பாணம் – நெல்லியடி நகரில் உள்ள ஆடை விற்பனையகம் ஒன்றிற்கு தீ வைத்த பிரதான சந்தேகநபரை காங்கேசன்துறை குற்ற தடுப்பு பொலிஸார் கைது செய்து நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, புடவையகத்துக்கு 2 தடவைகள் தீ வைக்க முற்பட்ட நிலையில் அது முடியாமல் போயுள்ளது.

இந்த நிலையில் மீண்டும் கடந்த 02-10-2024 திகதி இரவு வாள்களுடன் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் புடவையகத்துக்கு தீ வைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டிருந்தது.

இச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர் கடந்த (05) மாலை காங்கேசன்துறை குற்றதடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கைது செய்யப்படும் போது வாள் ஒன்றும் பெற்றோல் குண்டு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் காங்கேசன்துறை குற்றத் தடுப்பு பொலிஸார் ஒப்படைத்துள்ளனர்.

இதேவேளை சந்தேகநபரிடம் விசாரணை மேற்கொண்டு வரும் நெல்லியடிப் பொலிஸார் விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரை நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளனர்.