தொலைத் தொடர்பு கோபுரங்களில் கைவரிசை காட்டியவர் சிக்கினார்

மீரிகம புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரங்கள் மற்றும் மின்மாற்றிகள் ஆகியவற்றில் இருந்து செப்பு கம்பிகளை திருடிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மீரிகம பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருடப்பட்ட 457 அடி கம்பிகள் மற்றும் கம்பிகளை உருக்கி பெறப்பட்ட 40 கிலோ செப்பும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

மீரிகம, நால்ல, தொம்பே, அத்தனகல்ல, பல்லேவெல, நிட்டம்புவ, கம்பஹா, வீரகுல ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள தொலைத்தொடர்பு கோபுரங்கள் மற்றும் மின்மாற்றிகள் ஆகியவற்றின் செப்பு கம்பிகளை சந்தேக நபர் வெட்டியுள்ளதாக பொலிஸாருக்கு தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மீரிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.