கொழும்பில் அதிகளவான மழை வீச்சி!

கொழும்பு மாவட்டத்தில் நேற்று (06) காலை 8.30 மணி முதல் இன்று காலை 7.00 மணி வரை 162.5 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது தவிர, வல்லல்லாவிட்ட (112.5 மி.மீ.), ஹொரணை (111.5 மி.மீ.), நெலுவ (109 மி.மீ.) மற்றும் உடுகம (94.5 மி.மீ.) ஆகிய இடங்களில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில், அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயம் (வட அரைக்கோளத்திலிருந்தும் தென் அரைக்கோளத்திலிருந்தும் வீசும் வணிகக் காற்றுகள் ஒடுங்கும் பிரதேசம்) நாட்டின் வானிலையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.