மோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டு பிரஜைகள் கைது!

இணையத்தளத்தில் திட்டமிட்டு பண மோசடியில் ஈடுபட்ட பல வெளிநாட்டு பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கம்பஹா ஹங்வெல்ல வீதியில் அமைந்துள்ள ஹோட்டல் மற்றும் ஹங்வெல்ல அவிசாவளை வீதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனமொன்றை சுற்றிவளைத்த போதே இந்த வெளிநாட்டுப் பிரஜைகள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த குழு சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் ஊடாக நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 29 சீன ஆண்கள், ஒரு சீன பெண், ஒரு இந்திய ஆண் மற்றும் மூன்று பெண்கள், இரண்டு தாய்லாந்து ஆண்கள் மற்றும் நான்கு பெண்கள் அடங்கியுள்ளனர்.

நிதி மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட 499 கையடக்க தொலைபேசிகள், 24 மடிக்கணினிகள் மற்றும் 29 டெஸ்டொப்கள் விசாரணை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன.

சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில், Investment Scam, Pig butchering Scam போன்றவற்றின் ஊடாக நிதி மோசடிகளில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

மேலும், இந்த சந்தேக நபர்கள் சீனா, இந்தோனேஷியா, தாய்லாந்து போன்ற கிழக்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்களையும் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த வைப்பாளர்களையும் வலையில் சிக்கவைத்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச பொலிஸ் மற்றும் யூரோபோல் ஆதரவுடன் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.