ஜந்து அரசியல் கட்சிகளுக்கு பொதுத் தேர்தலில் போட்டியிட தடை!

எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிட முடியாதவாறு ஐந்து கட்சிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு தடைவிதித்துள்ளது.

பதிவு செய்யப்பட்டுள்ள ஐந்து அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் காரணமாகவே அவர்கள் சார்ந்த கட்சிகளை வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் போட்டியிட அனுமதிப்பதில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த அரசியல் கட்சிகளின் செயலாளர்களாக பல்வேறு நபர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டுள்ள நிலையில், அது தொடர்பில் அண்மையில் உரிய பிரதிநிதிகளை அழைத்து கலந்துரையாடிய போதிலும், அது தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண இணக்கம் எட்டப்படவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன், நீதிமன்றத்தின் ஊடாக இப்பிரச்சினைக்குத் தீர்வுகாணுமாறு அக்கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுவரை குறித்த ஐந்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல்களில் போட்டியிட அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.