இலஞ்சம் பெற்ற போக்குவரத்து திணைக்கள ஊழியர்கள் கைது!

போக்குவரத்து திணைக்களத்தின் (Department of Motor Traffic) உதவி ஆணையாளர் உட்பட மூவர் இலஞ்சம் பெற்றதாக கூறப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு (Colombo) நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் உள்ள போக்குவரத்து திணைக்களத்தின் அலுவலகத்தில் வைத்து இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினால் இவர்கள் நேற்று (04) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மூன்று பேருந்துகளின் உரிமையை மாற்றுவதற்கு 3 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்றதாகக் குறிப்பிட்டு குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவிற்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போக்குவரத்து திணைக்களத்தின் உதவி ஆணையாளரும் அத்திணைக்களத்தில் பணிபுரியும் இரண்டு ஊழியர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதன்போது, சந்தேக நபரான போக்குவரத்து திணைக்களத்தின் உதவி ஆணையாளர் தன்னிடமிருந்த இலஞ்சம் பெற்ற பணத்தைக் கிழித்தெறிய முயன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.