பொலிஸ்மா அதிபரின் நியமனத்தை ரத்து செய்ய ஜனாதிபதி உத்தரவு!

பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய வழங்கிய நியமனம் ஒன்றை இரத்துச் செய்து ஜனாதிபதி அநுரகுமார உத்தரவிட்டுள்ளார்.

பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய நேற்றைய தினம் (03) பொலிஸ் திணைக்களத்தின் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் அமைதிக்கான பிரிவின் பதில் பணிப்பாளராக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அஜந்த ரொட்ரிகோவை நியமித்திருந்தார்.

எனினும், கடந்த 2022ஆம் ஆண்டின் அரகலய மக்கள் எழுச்சிப் போராட்டக் காலத்தில் இவர் போராட்டக்காரர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்கிய பொலிஸ் அதிகாரியாக அடையாளப்படுத்தப்பட்டிருந்தார்.

அதன் காரணமாக போராட்டக்காரர்கள் தொடர்ந்த பல்வேறு அடிப்படை உரிமை மீறல் வழக்குகளில் இவரும் பிரதிவாதியாக உள்வாங்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அஜந்த ரொட்ரிகோவை பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் அமைதிக்கான பிரிவின் பதில் பணிப்பாளராக பதில் பொலிஸ் மா அதிபர் நேற்று நியமித்திருந்த விவகாரம் இன்றையதினம் சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனத்தை எதிர்கொண்டிருந்தது.

அதனையடுத்து, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் உத்தரவின் போில் தற்போது அஜந்த ரொட்ரிகோ முன்னர் கடமையாற்றிய பொலிஸ் கலகமடக்கும் பிரிவிற்கே மீண்டும் மாற்றப்பட்டுள்ளார்