உயிரிழந்த மனைவியின் உடலை நாட்டிற்கு கொண்டுவர போராடும் கணவன்!

வவுனியாவை சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயொருவர் சவுதி அரேபியாவில் உயிரிழந்துள்ள நிலையில் அவரது உடலை மீட்டுத்தருமாறு கணவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக அவரது கணவர் தெரிவித்தாவது

எனது மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக வேலை விசாவில் அனுராதபுரம் பகுதியில் உள்ள முகவர் ஒருவரின் ஊடாகவே சவுதி அரேபியாவிற்கு சென்றுள்ளார்.

மனைவி பயணம் செய்த நாளிலிருந்து இதுவரை காலமும் சாதாரண தொலைபேசியில் தான் எம்மோடு கதைத்து வந்தார். அவரது முகத்தை கூட நாம் பார்க்கவில்லை.

இதேவேளை சமீப நாட்களாக தனக்கு அங்கு சித்திரவதை இடம்பெறுவதாகவும் தன்னை உடனடியாக நாட்டுக்கு திருப்பி எடுக்கமாறும் கூறினார்.

இது தொடர்பாக பல தடவை அவரை அனுப்பிய முகவரிடம் கூறியும் உரிய பதிலை அவர் தரவில்லை.

இந்த நிலையில் எனது மனைவி சில நாட்களாக என்னுடன் தொடர்பினை ஏற்ப்படுத்தவில்லை. நாம் முகவரை அணுகியபோது அவர் சுகவீனமடைந்து இருப்பதாக எமக்கு தெரிவிக்கப்பட்டது.

பின்னர் அவர் உயிரிழந்துவிட்டதாக 15 நாட்களின் பின்னரே எமக்கு தகவல் வழங்கப்பட்டதாக கணவன் தெரிவித்திருந்தார்.

தற்போது மரணமடைந்து 40 நாட்கள் கடக்கின்ற நிலையில் எனது மனைவியின் உடலை கொண்டு வருவதற்கான எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.

எனவே அவரது சடலத்தையாவது விரைவாக பெற்றுத்தருவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

குறித்த சம்பவத்தில் 38 வயதான நிலூபா என்ற 3 பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்துள்ளதாக அவரது கணவர் தெரிவித்துள்ளார்.