மட்டக்களப்பு சுவிஸ் கிராமத்தில் 19 வயது இளைஞர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை!

மட்டக்களப்பு கொக்குவில் சுவிஸ் கிராமத்தில் வீதியில் சத்தம் எழுப்பியவாறு மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற 19 வயது இளைஞர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.

இந்த சம்பவம் நேற்று (27) இரவு இடம்பெற்றதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் சுவிஸ் கிராமத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞரே உயிரிழந்துள்ளார். நேற்றிரவு வீதியில் அதிக ஒலி எழுப்பியவாறு மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞருடன் சிலர் தகராறில் ஈடுபட்டுள்ளனர்

அவ்வேளை, இளைஞரின் தந்தை தனது மகனை அங்கிருந்து மீட்டு அழைத்துச் சென்றுகொண்டிருந்தபோது சிலர் இளைஞரின் கழுத்துப் பகுதியை குறிவைத்து கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த இளைஞர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதோடு தாக்குதலில் ஈடுபட்டவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பில் கொக்குவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.