51%வாக்களர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன!

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளில் 51% விநியோகிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார்.

அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ செய்தி இணையத்தளத்தில் நேற்று (09) கருத்து தெரிவிக்கும் போதே பிரதி தபால் மா அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையிலுள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் உத்தியோகபூர்வ வாக்காளர் சீட்டுக்கள் வழங்கப்படும் எனத் தெரிவித்த பிரதி தபால் மா அதிபர், தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ள சுமார் ஒரு கோடியே எழுபத்தொரு இலட்சத்திற்கு அதிகமான சகல வாக்காளர்களுக்காகவும், 64 இலட்சம் வீடுகளுக்கு இந்த வாக்காளர் அட்டைகள், விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

அவ்வாறே நேற்று (08) வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் விசேட நாளாக செயற்பட்டதாகத் தெரிவித்த பிரதித் தபால் மா அதிபர் வீட்டுக்கு வீடு சென்று விநியோகிக்கும் செயற்பாடு செப்டம்பர் 14ஆம் திகதி (சனிக்கிழமை) யுடன் நிறைவடையும் எனச் சுட்டிக்காட்டினார்.

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை பெற்றுக் கொள்ள முடியாத நபர்கள் செப்டம்பர் மதம் 18ஆம் திகதியிலிருந்து தேர்தல் இடம்பெறும் செப்டம்பர் 21ஆம் திகதி வரை அலுவலக நேரத்தில் தாம் வசிக்கும் பிரதேசத்தின் தபாலகத்திற்குச் சென்று, அடையாள அட்டையைச் சமர்ப்பித்து தனது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்திப் அதனை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அவ்வாறே வாக்காளர் அட்டைகளை விநியோகிப்பதற்கு தபால் திணைக்களத்தின் கடிதங்களை விநியோகிக்கும் தபால் மற்றும் உப தபால் அலுவலகங்கள் 2090 மற்றும் கடிதங்களை விநியோகிக்கும் 8,000 ஊழியர்களும் இதற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பிரதித் தபால் மா அதிபர் விவரித்தார்.