கிருஷ்ண ஜெயந்தி வழிபாட்டு முறை

கிருஷ்ணரை அனைவரின் வீட்டிலும் எழுந்தருள செய்து, அவரின் அருளை பெறுவதே கிருஷ்ண ஜெயந்தியின் நோக்கம் ஆகும். கிருஷ்ண ஜெயந்தி இந்த ஆண்டு ஆகஸ்ட் 26ம் திகதி திங்கட்கிழமை வருகிறது.

தேய்பிறை அஷ்டமி, கிருத்திகை, திங்கட்கிழமை, கிருஷ்ண ஜெயந்தி என பல தெய்வங்களுக்கும் உரிய வழிபாட்டு நாள் ஒரே நாளில் இணைந்து வருவதால் இது மிகவும் சிறப்புக்குரிய நாளாக கருதப்படுகிறது.

அதுவும் குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கு நிச்சயம் பலன் தரக் கூடிய நாளாக கிருஷ்ண ஜெயந்தி விளங்குகிறது. கிருஷ்ண ஜெயந்தி வழிபாட்டினை எந்த நேரத்தில், எப்படி மேற்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

ஆகஸ்ட் 26ம் திகதி காலை 09.13 முதல், ஆகஸ்ட் 27ம் திகதி காலை 07.30 வரை அஷ்டமி திதி உள்ளது. அதனால் கோகுலாஷ்டமி வழிபாட்டினை மேற்கொள்பவர்கள் ஆகஸ்ட் 26ம் திகதி மாலை 6 மணிக்கு பிறகு கிருஷ்ண வழிபாட்டினை துவக்கலாம்.

கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட நினைப்பவர்கள், ரோகிணி நட்சத்திரம் இருக்கும் சமயமான ஆகஸ்ட் 26ம் திகதி இரவு 09.41 மணி துவங்கி, ஆகஸ்ட் 27ம் தேதி இரவு 08.54 வரை தங்களின் வழிபாட்டினை வைத்துக் கொள்ளலாம்.

ரோகிணி நட்சத்திரம், அஷ்டமி திதி இரண்டை சேர்த்து வழிபடுவதற்கான நேரம் ஆகஸ்ட் 27ம் தேதி காலை 6 மணி முதல் 07.20 வரை உள்ளது.

பொதுவாக கிருஷ்ண ஜெயந்தி வழிபாட்டினை மாலையில் மேற்கொள்வது தான் வழக்கமாக உள்ளது. கிருஷ்ணரை வரவேற்க ஆயர்பாடியில் மாலை நேரத்தில் தான் விளக்கேற்றி, மேள தாளங்கள் இசைத்து, கோபியர்கள் கொண்டாடியதாக சொல்லப்படுகிறது.

மகாலட்சுமி வழிபாட்டினையும் மாலையில் செய்வது தான் சிறப்பு என்பதால் கிருஷ்ண ஜெயந்தி வழிபாடுகளை மாலை துவங்கி, இரவு வரை கொண்டாடுவது சிறப்பு. இதுவே கிருஷ்ணர் அவதரித்த நேரமாகவும் சொல்லப்படுகிறது.

அதே சமயம் குழந்தை வரம் வேண்டி கிருஷ்ண ஜெயந்தி விரதம் இருப்பவர்கள் ரோகிணி நட்சத்திரமும், அஷ்டமி திதியும் இணைந்து இருக்கும் நேரத்தில் வழிபடுவதே சிறப்பானதாகும். அதனால் ஆகஸ்ட் 27ம் திகதி காலையில் இவர்கள் தங்களின் வழிபாட்டினை மேற்கொள்ளலாம்.

கிருஷ்ண ஜெயந்தி வழிபாட்டு முறை
கிருஷ்ண ஜெயந்தி வீட்டை சுத்தம் செய்து, ஒரு மனைப்பலகையில் கிருஷ்ணரின் படம் அல்லது சிலையை வைத்து வாசனையான மலர்களால் அலங்கரிக்க வேண்டும். குழந்தை வரத்திற்கு விரதம் இருப்பவர்கள் தவழ்ந்த நிலையில் இருக்கும் குட்டி கிருஷ்ணரின் சிலையை வாங்கி வைத்து வழிபடுவது சிறப்பு.

வீட்டு வாசல் துவங்கி, கிருஷ்ணரின் படம் வைத்திருக்கும் இடம் அல்லது பூஜை அறை வரை பாதங்கள் வரைய வேண்டும்.

கிருஷ்ணரின் படத்திற்கு முன்பு சிறிய நெய் விளக்கு ஏற்றி வைத்து வழிபட வேண்டும். கிருஷ்ணருக்கு நைவேத்தியமாக நம்மால் என்னவெல்லாம் முடிகிறதோ அவை அனைத்தையும் படைக்கலாம்.

பல வகையான கலவை சாதங்கள், இனிப்பு வகைகள், முறுக்கு, சீடை, லட்டு போன்ற பலவிதமான பட்சணங்கள் ஆகியவற்றை படைக்கலாம். அதோடு பழங்கள் என்ன கிடைக்கிறதோ அவற்றையும் படைத்து வழிபடலாம்.

பல வகையான நைவேத்தியங்கள் படைத்து வழிபட முடியாவிட்டாலும் 5 பொருட்களை கண்டிப்பாக வைத்து வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும். கண்ணனுக்கு மிகவும் விருப்பமான பால் பொருட்களான பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் இந்த ஐந்து பொருட்களையும் படைத்து வழிபடங்கள்.

ஐந்தும் முடியா விட்டாலும் சிறிது வெண்ணெய் மட்டுமாவது வைத்து வழிபடலாம். அதுவும் முடியாது என்பவர்கள் சிறிதளவு பாலை காய்ச்சி, அதில் நாட்டு சர்க்கரை அல்லது கற்கண்டு சேர்த்து கிருஷ்ணருக்கு நைவேத்தியமாக படைத்து வழிபடலாம்.

கிருஷ்ணருக்குரிய நாமங்கள், போற்றி பாடல்கள், மந்திரங்கள் ஆகியவற்றை சொல்லி வழிபடலாம். எதுவும் தெரியாதவர்கள் நமக்கு தெரிந்த கிருஷ்ணனின் பெயர்களை சொல்லி வழிபடலாம்.

கிருஷ்ண ஜெயந்திக்காக அரிசி மாவினால் போட்ட பாதங்களை அன்று இரவு முழுவதும் அப்படியே விட்டு விட வேண்டும்.

மறுநாள் காலை பூஜை அறையில் இருக்கும் கிருஷ்ண படத்திற்கு கற்பூர ஆரத்தி காட்டி வழிபட்டு, கிருஷ்ணரின் பாதம் எப்போதும் நம்முடைய வீட்டில் பதிந்து இருக்க வேண்டும் என வேண்டிக் கொண்டு, ஒரு துணியால் அந்த பாதங்களை துடைத்து சுத்தம் செய்யலாம்.