மன்னார் இளம் தாய் மரணம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ளஅதிரடி நடவடிக்கை!

மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த மரியராஜ் சிந்துஜா என்ற பெண்ணின் சம்பவம் தொடர்பில் வைத்தியர் ஒருவரை பணியிடை நீக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான கடிதம் ஒன்று மத்திய சுகாதார அமைச்சினால் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மாதம் 28ஆம் திகதி குழந்தையைப் பிரசவித்த 27 வயதான பட்டதாரி பெண், அதிக குருதி போக்கு காரணமாகக் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

அந்தச் சந்தர்ப்பத்தில் அங்கிருந்த வைத்தியர்கள் அவருக்குரிய முறையில் சிகிச்சையளிக்கவில்லை எனவும் வைத்தியர்களின் அசமந்த போக்கின் காரணமாகவே அவர் உயிரிழந்ததாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய ஏலவே, நான்கு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

2 தாதியர்களுக்கும் இரண்டு குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்களுக்கும் இவ்வாறு பணியிடை நீக்கம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து வைத்தியர் ஒருவருக்கும் பணியிடை நீக்கம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

இருப்பினும் இதுவரையில் குறித்த கடிதம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையைச் சென்றடையவில்லை என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, மரியராஜ் சிந்துஜாவின் மரணம் தொடர்பில் நேற்றைய தினமும் மத்திய சுகாதார அமைச்சின் அதிகாரிகள் குழுவொன்று மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.