அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் தொடர்பில் உறுதி அளித்த ஜனாதிபதி!

நாட்டிலுள்ள அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தை அடுத்த வருடம் 55,000 ரூபாவாக அதிகரிக்க உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.

அனுராதபுரம் சல்காது மைதானத்தில் நேற்று முன்தினம் (17) இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், நாட்டின் எதிர்காலம் கருதியே அனைத்து கட்சிகளும் இன்று ஒன்றிணைந்துள்ளோம்.

அடுத்த வருடத்தில் அரச ஊழியர்களுக்கான வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு 25,000 ரூபாவாக அதிகரிப்படவுள்ளது.

அத்துடன், அவர்களுக்கான அடிப்படைச் சம்பளம் 55,000 ரூபாவாக அதிகரிக்கப்படும். சிலிண்டர் விலை 6,000 ரூபாய் வரை உயரும் போது சஜித் அனுர போன்றவர்கள் எங்கே இருந்தனர் என்று கூற வேண்டும்.

அதற்கான பதிலை அவர்கள் வழங்கவில்லையாயின் தேர்தலில் போட்டியிடுவதற்குப் பொருத்தமற்றவர்களாவர்.

இந்த நாட்டின் பொருளாதாரத்தை சஜித்தோ அனுரவோ மீள கட்டியெழுப்பவில்லை.“என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை சிறிலங்கா ஜனாதிபதி தேர்தல் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.