கண்டி எசல பெரஹராவின் போது மதுபானம் விற்பனை செய்த வர்த்தகர் கைது!

கண்டி எசல பெரஹராவின் போது உணவகம் ஒன்றில் மதுபானத்தை விற்பனை செய்த வர்த்தகர் கண்டி ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

எசல பெரஹரா நிகழ்வினை முன்னிட்டு கண்டியை அண்மித்த பகுதிகளில் உள்ள மதுபான கடைகள் மற்றும் இறைச்சி கடைகளை எதிர்வரும் ஓகஸ்ட் 20ம் திகதி வரை மூடுவதற்கு தீர்மானித்துள்ள போதிலும் அதனையும் மீறி இவர் மதுபானத்தை விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த உணவகத்தை பொலிஸார் சோதனையிட்ட போது 12 பியர் டின்கள் காணப்பட்டதாகவும் பெருமளவிலான பியர் டின்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

550 ரூபாய் பெறுமதியான பியர் டின் ஒன்று 1000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.