இலங்கை கடற்பரப்பில்22 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 22 இந்திய மீனவர்கள் புத்தளம் – கற்பிட்டி வடக்கு கடற்பகுதியில் வைத்து கடற்படையினரால் திங்கட்கிழமை (05) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு படகுகளில் தமிழகம் – தூத்துக்குடியில் இருந்து வந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

இரண்டு படகுகளில் வருகை தந்த குறித்த இந்திய மீனவர்கள் கற்பிட்டியில் வடக்கே  மீன்பிடித்துக் கொண்டிருந்தபோதே அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கடற்படையினரால் இந்த 22 மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.

மேலும் குறித்த இந்திய மீனவர்கள் பயணித்த இரண்டு விசைப் படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 22 மீனவர்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்