மன்னார் வைத்தியசாலையில் இளம் தாய் உயிரிழப்பு வெளிநாட்டில் இருந்து கொலை அச்சுறுத்தல்!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒரு பிள்ளையின் தாயான பட்டதாரியான இளம் பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து கொலை அச்சுறுத்த விடுக்கப்படு வருவதாக வைத்திய சாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த இளம் தாய் உயிரிழந்தமை தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டிருந்ததை அடுத்து , வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளரினால் அமைக்கப்பட்ட சுயாதீன விசாரணை குழுவின் விசாரணைகள் நிறைவடைந்துள்ளது.

ஊழியர்களின் அசமந்தம்
இந்த நிலையில் சம்பவ தினத்தின் போது சிலர் தவறிழைத்துள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஸாத் எம் ஹனீபா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் – தம்பனைக்குளம் பகுதியைச் சேர்ந்த பட்டதாரியான இளம் தாய் ஒருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த 28 ஆம் திகதி உயிரிழந்தார். சம்பவத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்த மரியராஜ் சிந்துஜா வயது (27) என்பவரே உயிரிழந்தவராவார்.

குறித்த பெண்ணின் மரணத்திற்கு சம்பவ தினம் விடுதியில் இருந்தவர்களின் அசமந்த போக்கே காரணம் என குற்றம் சுமத்தப்பட்டது.

குறித்த மரணம் தொடர்பாக வடமாகாண சுகாதார அமைச்சினால் சுயாதீன விசாரணை குழு ஒன்று நியமிக்கப்பட்டு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வருகை தந்து துரித விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தவறிழைத்தமை கண்டுபிடிப்பு
இந்நிலையில் விசாரணைகள் நிறைவடைந்துள்ளதுடன் விசாரணைகளின் அடிப்படையில் சிலர் தவறிழைத்துள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பாக விசேட அறிக்கை வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளருக்கு மேலதிக நடவடிக்கைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் மத்திய சுகாதார அமைச்சின் விசாரணைக் குழு ஒன்று மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர்.
மத்திய சுகாதார அமைச்சின் விசாரணைகள் முடிவடைந்தவுடன் தவறிழைத்தவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

அதேவேளை பெண்ணின் மரணம் தொடர்பாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து எனது தொலைபேசிக்கு பல்வேறு அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகிறதாகவும் அவர் கூறினார்.

மேலும் அந்த அச்சுறுத்தல் குறித்து மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஸாத் எம் ஹனீபா தெரிவித்தார்.