யாழ்.பல்கலைக்கழக புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் விடுக்கும் எச்சரிக்கை!

நாட்டில் எதிர்வரும் 14.08.2024 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா அறிவித்துள்ளார்.

வெப்பச் சலனம் மற்றும் காற்று வேக மாறுபாடு காரணமாக மழை பெய்யும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி உள் நிலப்பகுதிகளில் கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடும்போது முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மற்றும் திருகோணமலை மாவட்டங்கள் சற்று கனமான மழையைப் பெறும் வாய்ப்புள்ளது.

எனவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நெல் மற்றும் சிறுதானிய பயிர்களை அறுவடை செய்பவர்கள் மழை தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியம்.

மேலும் வெப்பச் சலன செயற்பாடு காரணமாக இந்த மழை கிடைக்கும் என்பதனால் இடி மின்னல் தொடர்பில் மிகவும் அவதானமாக இருப்பது அவசியம் என அவர் எச்சரித்துள்ளார்.

இதேவேளை பலத்த மின்னல் எச்சரிக்கை குறித்த அறிவிப்பு ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் பதுளை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய பலத்த மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடிய சாத்தியம் அதிகம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.