வைத்தியர் அர்ச்சுனா தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

மன்னார் பொது வைத்தியசாலைக்கு அனுமதியின்றி நுழைந்து முரண்பாட்டில் ஈடுபட்டதுடன் மகபேற்று வைத்தியர் அறைக்குள் நுழைந்து புகைப்படம் மற்றும் காணொளி எடுத்தமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வைத்தியர் அர்சுனாவை (Archuna) தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இன்றைய தினம் திங்கட்கிழமை (5) நகர்தல் பத்திரம் ஊடாக வைத்தியர் அர்சுனா வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் பிணை மனு நிராகரிக்கப்பட்டு தொடர்ந்து விளக்க மறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அதேநேரம் வைத்தியசாலையினுல் அனுமதி இன்றி வைத்தியருடன் நுழைந்து காணொளி பதிவுகளை மேற்கொண்ட இருவரையும் விசாரணைக்கு உட்படுத்துமாறு நீதவான காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

நீதவான் உத்தரவு

மன்னார் பொது வைத்தியசாலைக்குள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அனுமதியின்றி நுழைந்து பெண்கள் மகபேற்று விடுதிக்குள் பணியாற்றிய வைத்தியருக்கு இடையூறு விளைவித்ததுடன் வைத்தியரின் அறைக்கு சென்று அனுமதி இன்றி புகைப்படங்கள் மற்றும் காணொளி எடுத்தமை தொடர்பில் மன்னார் காவல்நிலையத்தில் வைத்தியர் அர்சுனாவிற்கு எதிராக முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது.

வைத்தியர் கடந்த சனிக்கிழமை மன்னார் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு மன்னார் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்திய போது அவரை எதிர்வரும் ஏழாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இந்தநிலையில், இன்றைய தினம் திங்கட்கிழமை (05) சட்டத்தரணிகள் ஊடாக வைத்தியருக்கு பிணைமனு மன்றில் விண்ணப்பம் செய்யப்பட்ட நிலையில் குறித்த நகர்தல் பத்திரம் ஊடான பிணை மனு நிராகரிக்கப்பட்டதுடன் தொடர்ந்து வைத்தியரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.