கிளப் வசந்த கொலை தொடர்பில் புதிய செய்தி!


 கிளப் வசந்த எனும் சுரேந்திர வசந்த பெரேரா கொல்லப்பட்டதையடுத்து, துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை ஏற்றிச் சென்ற வான் சாரதியும் பஸ்ஸின் சாரதியும் , தெற்கு குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் இன்று (24) கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். கடந்த 8ஆம் திகதி அதுருகிரியில் பச்சை குத்தும் மையத்தை திறக்கச் சென்ற கிளப் வசந்த எனப்படும் சுரேந்திர வசந்த பெரேரா சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஒருகோடி செலவழித்து கொலை

சம்பவத்தில் மற்றுமொருவரும் உயிரிழந்ததுடன், பிரபல பாடகர் கே. சுஜீவா மற்றும் நான்கு பேர் பலத்த காயமடைந்தனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் மேலும் இரு சந்தேக நபர்கள் நேற்று (23) மாலை அதுருகிரிய மற்றும் பத்தரமுல்ல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்கும் அவர்கள் வந்த கார் ஓட்டுநருக்கும் தப்பிக்க உதவியவர் சந்தேக நபர்களில் ஒருவர் என கூறப்படுகின்றது. துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரையும், அவர்கள் வந்த காரின் சாரதியையும் கொரத்தோட்டை பகுதியிலிருந்து வேனில் ஏற்றிக்கொண்டு வெலிஹிந்த பகுதிக்கு சென்று பஸ்ஸில் ஏற்றிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர், வேனை புலத்சிங்கள பகுதிக்கு கொண்டு சென்று மறைத்து வைத்துள்ளார். கைது செய்யப்பட்ட மற்றைய சந்தேக நபர் வெலிஹிந்த பிரதேசத்தில் இருந்து தெற்கு அதிவேக வீதியூடாக திக்வெல்ல பகுதிக்கு பஸ்ஸில் சந்தேக நபர்களுடன் சென்று பஸ்சை செல்ல கதரகம பிரதேசத்தில் மறைத்து வைத்த சாரதி ஆவார். அஹுங்கல்ல பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடைய இவர் இக்கொலையை மேற்கொண்ட டுபாயில் தலைமறைவாக உள்ள லொகு பெட்டி என்பவரின் உறவினராவார்.

அதோடு குறித்த காலப்பகுதியில் லொகு பெட்டி சந்தேக நபரை வாட்ஸ்அப் ஊடாக தொடர்பு கொண்டு அவருக்கு 120,000 ரூபாவை வழங்கியதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும், 26 வயதுடைய வேனின் சாரதி மீகம பிரதேசத்தில் வசிக்கும் மீன் வியாபாரி எனவும் அவருக்கு லொகு பெட்டி ஒரு இலட்சம் ரூபாவை வழங்கியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, லொகு பெட்டி என்ற குற்றவாளி கிளப் வசந்தவின் கொலைக்காக சுமார் ஒரு கோடி ரூபாவை செலவிட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

எனினும் இவ்வாறு பணம் செலவழித்து இந்த கொலையை செய்தமைக்கான காரணம் இதுவரை பொலிஸாரிடம் தெரிவிக்கப்படவில்லை. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் தெற்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் கயங்க மாரப்பனவின் மேற்பார்வையில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.