முல்லைத்தீவில் தீப்பிடித்த தும்பு தொழிற்சாலை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விசுவமடு வள்ளுவர்புரம் பகுதியில் அமைந்துள்ள தும்பு உற்பத்தி தொழிற்சாலையொன்று இன்று தீ விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

குறித்த பகுதிக்கு கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் தீயணைப்பு வாகனங்கள் இரண்டு வரவழைக்கப்பட்டு தீயினை கட்டுப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வள்ளுவர் புரம் பகுதியில் உள்ள பெண்கள் பலருக்கு தொழில் வாய்ப்பை வழங்கும் சிறு கைத் தொழில் நிறுவனமாக இந்த தும்புத் தொழிற்சாலை கடந்த 8 ஆண்டுகளாக இயங்கி வருகின்றது ஜனாதிபதி விருது வென்ற பெண் தொழில் முயற்ச்சியாளர் ஒருவரால் மேற்கொள்ளப்படும் இந்த தொழிற்சாலையில் 12 பெண் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றார்கள்

தும்புகளை பிரித்து காயவிடப்பட்ட இடத்தில் குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது தீயை கட்டுப்படுத்த முயற்சித்த போதும் கட்டுப்படுத்த முடியாத நிலையில் பிரதேச செயலகம் ஊடாக கிளிநொச்சியிலிருந்து தீயணைப்பு பிரிவின் இரண்டு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு முற்று முழுதாக நீர் பாய்ச்சப்பட்டு தும்புகளில் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது