இரண்டு தேர்தல்களையும் ஜனாதிபதி நடத்தியே ஆகவேண்டும் வலியுறுத்தும் மஹிந்த

அதிபர் ரணில் விக்ரமசிங்க, (Ranil Wickramasinghe ) நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளின் படி இந்த வருடம் அதிபர் தேர்தலையும், அடுத்த வருடம் நாடாளுமன்றத் தேர்தலையும் நடத்தியே ஆக வேண்டும் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், “அதிபரின் பதவிக் காலம் 5 வருடங்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக் காலமும் 5 வருடங்கள்.

அதிபர் தேர்தல்
எனவே, அரசமைப்பில் உள்ள ஒருசில ஓட்டைகளைக் காரணம் காட்டி மக்கள் ஆணை வழங்கும் தேர்தல்களுடன் எவரும் விளையாடக்கூடாது. தேர்தல்களை உரிய காலத்தில் நடத்த வேண்டும்.

இவ்வருடம் அதிபர் தேர்தலை நடத்தியே தீர வேண்டும்.தேர்தலை ஒத்திவைக்க மொட்டுக் கட்சி அனுமதி வழங்காது.

ரணிலின் வாக்குறுதி
இதேவேளை, அதிபர் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத்தைக் கலைத்துப் பொதுத் தேர்தலை நடத்துமாறு ரணிலுக்கு அழுத்தம் எதனையும் வழங்கவில்லை.

ஊடகங்களில் வரும் செய்திகள் எல்லாம் உண்மை இல்லை. இன்று பெரும்பாலான ஊடகங்கள் போலிச் செய்திகளையே வெளியிடுகின்றன.

அதிபர் ரணில் (Ranil Wickremesinghe) , நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளின்படி இந்த வருடம் அதிபர் தேர்தலையும், அடுத்த வருடம் நாடாளுமன்றத் தேர்தலையும் நடத்தியே ஆக வேண்டும். ரணில் வாக்குறுதிகளை மீறமாட்டார் என்று நம்புகின்றோம் என்றார் .