கொழும்பு பிரபல ஹோட்டலுக்கு உணவருந்த சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

கொழும்பு – கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரபல ஹோட்டலில் இடம்பெற்ற மோசடியால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் தனது முகநூலில் மன ஆதங்கத்தை வெளிப்படுத்தி பதிவு ஒன்றை இட்டுள்ள நிலையில் குறித்த பதிவு தற்போது வைரலாகி வருகின்றது.

அவர் வெளியிட்ட பதிவில்,

சில மாதங்களுக்கு முன்னர் ஒரு வடைக்கும் ஒரு கிண்ணம் தேநீருக்கும் 1000 ரூபாய் சுற்றுலா பயணியிடம் வாங்கி ஏமாற்றிய தேநீர் கடை உரிமையாளர் பற்றியும் பிறகு அவர் தண்டிக்கப்பட்டதையும் பார்த்தோம்.

ஆனால் பெரிய பணக்கார நபர்களினால் செயற்பட்டு வரும் ஹோட்டல் மற்றும் உணவு விடுதிகளில் எவ்வாறு ஏமாற்றப்படுகின்றனர் என்பதை இன்று ஆதாரத்துடன் பார்ப்போம்.

நேற்றிரவு (18-06-2024) கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றிற்கு 5 நண்பர்களுடன் இரவு போசனத்துக்காக சென்றிருந்தேன்.

இறுதியாக அவர்களுடைய ரசீதை பார்த்தபோது எனக்கு தூக்கி வாரிப்போட்டது. ஏனென்றால் பிரதான உணவுக்கு 30240 ரூபாய்கள் என்றும் வரியுடன் 40,638 ரூபாய்கள் என்று போட்டிருந்தது.

அதாவது, 34.38% வரி போடப்பட்டு இருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. வட் வரி 18% என்ற படியால் மேலாளரை அழைத்து எவ்வாறு வரி இப்படி அதிகரித்தது என்று விசாரித்தேன். அவர் 18% வட் வரி என்பதை உறுதி செய்ததுடன் சேவை வரி 10% என்று விளக்கம் அளித்தார்.

நான் இது 28% ஐ விட அதிகமாக இருக்கிறது என்று கூறிய போது 2% சுற்றுலா பயணி வரி என்று கூறினார்.

நான் என்னுடன் வந்த மொத்தமாக 6 பேரில் ஒருவர் மட்டுமே வெளிநாட்டில் இருந்து வந்தவர் நீங்கள் எவ்வாறு எங்களிடம் சுற்றுலா பயணி வரி விதிக்க முடியும் என்று கேட்டபோது அவரால் எந்த பதிலும் அளிக்க முடியவில்லை.

மேலும் மேலதிகமாக 2% வரி அல்ல 28% வரிக்கு மேலதிகமாக 6.38% வரி அறவிடப்பட்டுள்ளது.

அதற்குரிய விளக்கம் எதுவும் உங்களுடைய ரசீதில் இல்லை என்று கூறியபோது அவர் பதிலை சொல்ல முடியாமல் திணறினார்.

சிறுகடை உரிமையாளரை 1000 ரூபாய் வடைக்காக தண்டித்தார்கள்.

ஆனால் நாள் தோறும் இவ்வாறு பல லட்சம் ரூபாய்களை சுற்றுலா பயணிகளிடமும் இலங்கை குடிமக்களிடமும் ஏமாற்றி வசூலிக்கும் இவர்களை போன்றவர்களை தண்டிப்பது யார்?

ஊழல் நிறைந்த ராஜபக்சர்களின் ஆட்சிக்கு பிறகு ஊழல் அனைத்து மட்டங்களிலும் தலைவிரித்தாடும் நிலையில் இவர்களை தண்டிக்கும் ஆட்சி மாற்றம் ஏற்படுமா ? என அவரது பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது