இலங்கை – இந்திய கப்பல் சேவை தொடர்பில் வெளியான தகவல்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் (india) இடையில் நடாத்தப்பட்டு இடைநிறுத்தப்பட்டுள்ள கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santosh Jha) தெரிவித்துள்ளார்.

அத்துடன் இராமர் பாலம் அமைப்பது தொடர்பான வேலைத்திட்டங்களும் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சந்தோஷ் ஜா குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு (Batticaloa) – காந்திபூங்காவில் நேற்று (2.5.2024) நடைபெற்ற நிகழ்வில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இருவழி கட்டணம்

இலங்கையின் காங்கேசன்துறை (Kangesanthurai) மற்றும் இந்தியாவின் (india)  நாகப்பட்டினத்திற்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவையை எதிர்வரும் மே மாதம் 13ஆம் திகதி மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இந்த்ஸ்ரீ படகுசேவை தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சோ.நிரஞ்சன் நந்தகோபன் (Niranjan Nandagopan) தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை (Kangesanthurai) இடையிலான கப்பல் சேவைக்காக ‘சிவகங்கை’ எனும் கப்பல் பயன்படுத்தப்படவுள்ளது.

150 பயணிகள் பயணிப்பதற்கான வசதிகளை கொண்ட இந்த கப்பலில் பயணிப்பதற்கு இருவழி கட்டணமாக வரிகள் உள்ளடக்கப்பட்டு 34,200 ரூபாவை (8400 இந்திய ரூபா) அறவிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

கப்பலில் பயணிக்கும் பயணியொருவர் 60 கிலோகிராம் எடையுடைய பொருட்களை எடுத்துச் செல்வதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது. எவ்வாறாயினும், பொதியொன்றின் எடை 20 கிலோகிராமுக்கு உட்பட்டதாக அமைய வேண்டியது வரையறுக்கப்பட்ட விடயமாக உள்ளதாக சோ.நிரஞ்சன் நந்தகோபன் குறிப்பிட்டுள்ளார்.