தெஹிவளை துப்பாக்கிச் சூடு

தெஹிவளை ஓர்பன் பிளேஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் கடந்த 19ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கல்கிஸ்ஸை படோவிடா, பகுதியை சேர்ந்த 33 வயதுடைவர் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.

கடந்த 19ஆம் திகதி ஓர்பன் பிளேஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரினால் நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்தார்.

சம்பவம் தொடா்பில் தெஹிவளை, சுமுது மாவத்தை பகுதியில் நேற்று (26) நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் துப்பாக்கிச் சூட்டுக்காக பயன்படுத்திய மோட்டார் சைக்கிளின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதன்போது, ​​அவரது பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டு ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேகநபர் இன்று (27) கல்கிசை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்