வீதியில் சாகசம் காட்ட சுற்றிய 16 பேர் பொலிஸாரால் கைது

   கடுவலை வெலிவிட்ட வெவ வீதியில் நேற்று (16) ஞாயிற்றுக்கிழமை மாலை மோட்டார் சைக்கிள்களை பொறுப்பற்ற முறையில் ஓட்டிச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் 16 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த கடுவலை நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

18 முதல் 26 வயதுக்குட்பட்டவர்கள்

இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களை அதிவேகமாக ஓட்டிச் சென்றதுடன், சிலர் ஒற்றைச் சக்கரத்துடன், தலைக்கவசம் அணியாமல் சென்றதாக தெரியவந்துள்ளது.

அத்தோடு, பொலிஸாரின் அறிவுறுத்தலைப் புறக்கணித்துவிட்டு இளைஞர்கள் வேகமாகச் சென்றதுடன், அதிகாரிகள் அவர்களைத் துரத்திச் சென்று பிடித்து 16 மோட்டார் சைக்கிள்களைக் கைப்பற்றினர்.

கைதுதானவர்கள் 18 முதல் 26 வயதுக்குட்பட்ட வெல்லம்பிட்டிய, முல்லேரியா, அங்கொடை, மாலபே மற்றும் களனிமுல்ல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை நாளை செவ்வாய்க்கிழமை (ஜூலை 18) கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான விசாரணைகளை கடுவலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.