எல்பிட்டிய தேர்தல் இன்று!

காலி மாவட்டம் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் இன்று (26.10.2024) சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட 8 அரசியல் கட்சிகள், 1 சுயேட்சைக் குழு என்ற அடிப்படையில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தலை நடத்துவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

எல்பிட்டிய தேர்தல் தொகுதியை அண்மித்த பகுதியில் நாடாளுமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபடுவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

அரசமைப்பின் பிரகாரம் பதவிக் காலம் நிறைவடைந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலை வெகுவிரைவில் நடத்துமாறு உயர்நீதிமன்றம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

உள்ளுர் அதிகார சபைகள் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் (262 ஆம் அத்தியாயம்) 53 அ(3) ஆம் பிரிவினால் வாக்காளரை உரிய குறியீட்டினால் அடையாளமிடுதல் தொடர்பில் தோற்றம் பெறக்கூடிய பிரச்சினைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு இன்று நடைபெறவுள்ள காலி மாவட்டம், எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலின்போது வாக்காளரின் இடது கை பெருவிரலில் உரிய அடையாளமிடப்படும்.

வாக்காளரின் இடது கையில் பெருவிரல் இல்லாதிருக்கும் பட்சத்தில் உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் (262 ஆம் அத்தியாயம்) 53அ (3), அ,ஆ, (1),(2), (3) ஆம் பிரிவுகளுக்கு அமைய அவரது வலது கையில் உள்ள வேறேதேனுமொரு விரல் உரிய குறியீட்டினால் அடையாளமிடப்படும்.
ஜனாதிபதித் தேர்தலை நிறைவு செய்ததன் பின்னர் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தேசித்திருந்த நிலையில், நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்துவதற்கான அதிவிசேட வர்த்தமானியை ஜனாதிபதி கடந்த மாதம் வெளியிட்டிருந்தார்.

பொதுத் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடத்தி நிறைவு செய்ததன் பின்னர் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு உத்தேசித்துள்ளது.

இவ்வாறான பின்னணியில் காலி மாவட்டம், எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இடது கை பெருவிரல்
8 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் உட்பட 2 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியிருந்த நிலையில் 8 அரசியல் கட்சிகளும்,1 சுயேச்சைக் குழுவும் மாத்திரமே குறித்த காலப்பகுதியில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்தன.

இதற்கமைய தபால் மூல வாக்களிப்பு இம்மாதம் 14 மற்றும் 18 ஆகிய திகதிகளில் இடம்பெற்றது.

2024.09.21ஆம் திகதியன்று நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது வாக்காளரின் இடது கை சிறு விரலில் உரிய குறியீடு இடப்பட்டுள்ளது.