சி.ஐ.டியிலிருந்து வௌியேறினார் நாமல்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் வாக்குமூலம் அளித்து விட்டு அங்கிருந்து வெளியேறினார்.

இன்று காலை 09.00 மணியளவில் முன்னாள் பாராளுமன்ற  உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, வாக்குமூலம் வழங்குவதற்காக தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வந்திருந்தார்.

அங்கிருந்து வௌியேறும் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், “வழக்கமாக, நம் நாட்டின் அரசியல் கலாச்சாரம் என்னவென்றால், அரசாங்கம் மாறும்போது, ​​​​மற்ற அரசாங்கத்தில் இருந்தவர்களை அழைத்து வந்து விசாரணை செய்வது தான்.

வரச் சொன்னால் வருகிறோம். வேண்டுமென்றே நாட்டு மக்களுக்கு பொய் சொல்லி எங்களைப் பற்றிய தவறான வியூகத்தை உருவாக்கியுள்ளனர்.

2010 முதல் 2015 வரை எனது அலுவலகத்திற்கு ஒருவர் வந்து பணம் கொடுத்துள்ளார் என கூறியே இன்று என்னை அழைத்து வந்து விசாரித்தனர்.

இது அநாமதேய முறைப்பாடு. அந்த முறைப்பாட்டின் படி பணம் கொண்டு வந்து எனது அலுவலகத்தில் வைத்துவிட்டு சென்றுவிட்டனர். அது பற்றி என்னிடம் கேட்கப்படுகிறது” என்றார்.