மின்சாரம் தாக்கியதில் இளம் தாய் மரணம்!

அம்பாந்தோட்டை, லுனுகம்வெஹெர பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி 28 வயதுடைய இரு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக லுனுகம்வெஹெர பொலிஸார் தெரிவித்தனர்.

யமுனா சதமாலி ஜயதிலக்க என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த பெண் தனது வீட்டின் ஜன்னலில் துணியை பொருத்துவதற்காகச் சுவரில் ஆணி அடித்துக் கொண்டிருந்துள்ளார்.

இதன்போது, தாயாரின் இரண்டரை வயது குழந்தை, இரும்பு ஆணி ஒன்றை எடுத்து அருகிலிருந்த மின் இணைப்பில் பொருத்தி விளையாடிக்கொண்டிருந்துள்ளார்.

இதனை அவதானித்த எட்டு வயது குழந்தை, தாயாரிடம் இது தொடர்பில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து உடனடியாக தனது குழந்தைகளை அங்கிருந்து வெளியே அழைத்துச் சென்று, மின் இணைப்பில் பொருத்தப்பட்டுள்ள இரும்பு ஆணியை வெளியே எடுக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

பெண்ணின் கணவர் கொழும்பில் வேலை செய்து வருவதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லுனுகம்வெஹெர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.