ஹிருணிகா உள்ளிட்ட 14 பேர் தொடர்பில் நீதிமன்றத்தின் அறிவிப்பு!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 14 சந்தேகநபர்கள் தொடர்பிலான முறைப்பாட்டு மனுவை 2025 பெப்ரவரி 10ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக கொழும்பு நீதவான் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கடந்த சர்வதேச மகளிர் தினத்தன்று குருந்துவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் முற்றுகைப் போராட்டம் நடத்திய சம்பவம் தொடர்பிலேயே மேற்படி முறைப்பாட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கைகள் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அங்கு விசாரணைகளை மேற்கொண்டு வரும் குருந்துவத்தை பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பான சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்கள் இதுவரை தமக்கு கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

பெண்களுக்கெதிரான வன்முறைகள் தொடர்பில் சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவே சந்தேகநபர்களால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும் அரசாங்கத்தை அவமானப்படுத்தும் சதித்திட்டம் எதுவுமில்லை எனவும் சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி அத்துல ரணகல நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இந்த வழக்கு தொடர்பான கோப்புகள் சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால், இது தொடர்பில் சட்டமா அதிபருக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென நீதவான் குறிப்பிட்டுள்ளார்.

அதன்பிறகு, சம்பந்தப்பட்ட முறைப்பாட்டு மனுவை பெப்ரவரி 10ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதவான் அறிவித்தார்.