தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு!

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக இதுவரை 300இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் 53 முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையில், இதுவரை கிடைக்கப்பெற்ற மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 343 ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக கடந்த 24 மணிநேரத்தில், தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 21 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு பிரிவுக்கு 32 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.

அதன்படி, கடந்த ஒக்டோபர் 18ஆம் திகதி முதல் வன்முறைகள் தொடர்பில் முறைப்பாடுகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை எனவும் தேர்தல் சட்ட மீறல்கள் மாத்திரமே கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த முறைப்பாடுகளில் 145 முறைப்பாடுகள் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்தினாலும் மேலும் 198 முறைப்பாடுகள் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்தினாலும் பெறப்பட்டுள்ளன.