யாழ் ஆலயம் ஒன்றில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி!

யாழ்ப்பாணம் – அனலைதீவு பகுதியில் மின்சாரம் தாக்கி ஆண் ஒருவர் உயிரிழந்திருக்கும் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் இன்றையதினம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் 5ம் வட்டாரம், அனலைதீவு பகுதியைச் சேர்ந்த 37 வயதான நடராசா துசியந்தன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அனலைதீவில் உள்ள ஐயனார் ஆலயத்தில் பாடல் ஒலிபரப்புவதற்காக மின்சார இணைப்புகளில் ஈடுபட்டபோது தவறுதலாக மின்சாரம் தாக்கியுள்ளது.

இந்த நிலையில் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

உடற்கூற்று பரிசோதனைக்காக அவரது சடலம் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.