வளிமண்டலவியல் திணைக்களம் விடுக்கும் எச்சரிக்கை!

கனமழை, பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மேற்கு திசையில் வடமேற்கு திசைக்கு நகர்ந்து இன்று (15) காலை 05.30 மணியளவில் நன்கு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி மத்திய வங்காள விரிகுடா கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது அடுத்த 2 நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வடமேற்கு திசையில் நகர்ந்து குறித்த கடற்பகுதிக்கு மேற்கே பலத்த காற்றுடன் வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் இந்தியாவின் தென் ஆந்திரா கடற்கரையை நோக்கி நகரும்.

07 மற்றும் 15 வடக்கு அட்சரேகைகள் மற்றும் 81 மற்றும் 90 கிழக்கு தீர்க்கரேகைகளுக்கு இடைப்பட்ட கடற்பகுதிகளில் மிக பலமான காற்று (60-70 kmph), கனமழை மற்றும் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்.

கீழே உள்ள வரைபடத்தில் “எச்சரிக்கை” என்ற பிரிவின் கீழ் குறிக்கப்பட்டுள்ள கடல் பகுதியில் ஒக்டோபர் 17 ஆம் திகதி வரை பயணிக்க வேண்டாம் என மீனவ மற்றும் கடல்சார் சமூகத்தினர் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்வரும் அறிவிப்புகள் தொடர்பில் மீனவ மற்றும் கடல்சார் சமூகம் கவனம் செலுத்துமாறும் கோரப்பட்டுள்ளது.