மட்டக்களப்பில் கோர விபத்து சிறுவன் பலி!

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி, கல்முனை பிரதான வீதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 16 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்தானது, களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்துக்கு அண்மித்த பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.

கல்முனையில் இருந்து களுவாஞ்சிக்குடியை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் களுவாஞ்சிக்குடியில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்துக்கு அண்மையில் வீதியில் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது, கொக்கட்டிச்சோலையை சேர்ந்த 16 வயதுடைய ரவீந்திரன் என்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.