இலங்கை அபிவிருத்தி தொடர்பில் சீனா உறுதி!

இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி வேலைத்திட்டம் பூரண ஆதரவை வழங்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி உறுதியளித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜா இன்று (14) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்துள்ளார்.

இதன்போது, ஆட்சி நிர்வாகம், அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் மற்றும் தேர்தல் முறைமை என்பன தொடர்பில் முக்கியமாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், “பல் பரிமாண அபாய சூழ்நிலைகளைப் புரிந்துகொள்வது மற்றும் இலங்கை மக்கள் மீதான அவற்றின் தாக்கம்” என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கையும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் பிரதிநிதியினால் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின் அடிப்படையில் இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி வேலைத்திட்டம் பூரண ஆதரவை வழங்கும் எனவும் பிரதிநிதி உறுதியளித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பு குறைவாக இருப்பது குறித்தும் இந்த சந்திப்பில் விசேடமாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பொருளாதார நடவடிக்கை
இதேவேளை, பொருளாதார நடவடிக்கைகளில் கிராமப்புற பெண்களின் பங்களிப்பை மட்டுப்படுத்தியிருப்பது நிதித் துறையில் குறிப்பிடத்தக்க சவால்களுக்கு வழிவகுத்துள்ளது என்று ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், ஆசிய வலயத்தில் உள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையில் விவசாய உற்பத்தித் திறன் மோசமான நிலையில் காணப்படுவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் பெரும்பாலான விவசாயிகள் சிறிய அளவிலான நிலப்பரப்பைக் கொண்டுள்ளதாகவும் பெரும்பாலான விவசாயிகள் விவசாயத்தை தமது பிரதான வருமான வழியாக கருதவில்லை எனவும் ஜனாதிபதி எடுத்துக்காட்டியுள்ளார்.

இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, பேரம் பேசும் சக்தி மற்றும் விவசாய நடவடிக்கைகளை மேம்படுத்த உதவியாக உள்ள விவசாய சங்கங்களை வலுப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.