ஐக்கிய மக்கள் சக்திக்குள் உள்ளக முரண்பாடுகள்

ஐக்கிய மக்கள் சக்திக்குள் உள்ளக முரண்பாடுகள் காணப்படுகின்றன. அதன் அடிப்படையிலேயே அஜித் மன்னம்பெருமவின் தொகுதி அமைப்பாளர் பதவி நீக்கப்பட்டுள்ளது. தமிதா அபேரத்னவின் பெயர் இறுதி நேரத்தில் நீக்கப்பட்டமை நியாயமற்றது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் சனிக்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

அஜித் மன்னம்பெரும விவகாரம் கட்சியின் உள்ளக பிரச்சினையாகும். அவரது தொகுதி அமைப்பாளர் பதவி எதற்காக பறிக்கப்பட்டது என்பது எனக்குத் தெரியாது. ஆனால், வேட்புமனு தாக்கலின் பின்னரே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் கட்சி தலைவர் மற்றும் செயலாளரின் நிலைப்பாட்டை கோர வேண்டும்.

தமிதா ஆபரத்னவுக்கு வேட்புமனு இடமளிக்குமாறு கட்சி தீர்மானித்திருந்த நிலையில், இறுதிக் கட்டத்தில் எதற்காக அந்த தீர்மானம் மாற்றப்பட்டது என்பதும் எனக்கு தெரியாது. 

எனினும், இது அநீதியாகும் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். எனவே கட்சி இவ்விவகாரம் தொடர்பில் ஆராயும் என்று எதிர்பார்க்கின்றோம்.

சம்பிக ரணவக்கவின் கட்சியில் வேட்பாளர்களைக் களமிறக்குவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாகவே அவர் விலகினார் என்பதே நான் அறிந்த காரணியாகும். தயாசிறி ஜயசேகரவின் பெயர் குருணாகல் வேட்புமனு பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதும் தெரியாது என்றார்.