காணித்தகறரால் இடம்பெற்ற வாள்வெட்டில் மற்றுமோர் நபர் பலி!

வவுனியாவில் காணிப் பிணக்கால் இடம்பெற்ற வாள்வெட்டில் படுகாயமடைந்த மற்றைய நபரும் உயிரிழந்துள்ளார்.

அதன்படி, இந்தச் சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது.

வவுனியா – ஓமந்தை, கதிரவேலு பூவரசன்குளத்தைச் சேர்ந்த ரூ.திலீபன் (வயது 42) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபரும் அவரின் மருமகனும் நேற்றுமுன்தினம்(10) காணியைத் துப்புரவு செய்து கொண்டிருந்தபோது அங்கு வந்த சிலர் அவர்கள் மீது மிளகாய்த்தூளை வீசிவிட்டு, அவர்களை வாளால் தாக்கியதாக கூறப்படுகின்றது.

இந்தச் சம்பவத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான இளங்கோ (வயது 38) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மற்றைய நபரான திலீபன் படுகாயமடைந்த நிலையில் அயலவர்களால் மீட்கப்பட்டு வவுனியா பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று(11) உயிரிழந்துள்ளார்.

இதன்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இரு குடும்பங்களுக்கு இடையே நிலவி வந்த காணிப் பிணக்கே இந்த வாள்வெட்டுக்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது.

மேலும், இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஓமந்தைப் காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்