யாழில் தனிமையில் வசித்த மூதாட்டி சடலமாக மீட்பு!

யாழில் வீட்டில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி ஒருவர் தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மாந்தோப்பு, கரணவாய் தெற்கைச் சேர்ந்த குணாராஜலிங்கம் ஞானேஸ்வரி (வயது – 70) என்ற மூதாட்டியே சடலமாக மீட்கப்பட்டவராவார்.

அவர் உறவினர்கள் ஒருவரின் வீட்டுக்குச் சென்று விட்டு நேற்றுமுன்தினம் புதன்கிழமை தனது வீட்டுக்குச் சென்றிருந்தார்.

இந்நிலையில், நேற்று வியாழக்கிழமை முற்பகல் அவர் தீயில் எரிந்த நிலையில் சடலமாகக் காணப்பட்டார்.

இது தொடர்பில் நெல்லியடிப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்துக்குச் சென்ற கரவெட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி வே.பாஸ்கரன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், சடலத்தை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு நெல்லியடிப் பொலிஸாருக்குத் திடீர் மரண விசாரணை அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.