அரசினால் சம்பந்தனுக்கு வழங்கப்பட்ட வீட்டின் நிலை என்ன ஆனது!

அரசாங்கத்தினால் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமான ஆர்.சம்பந்தனுக்கு வழங்கப்பட்ட கொழும்பு வீடு இன்னும் அரசாங்கத்திடம் ஒப்படைக்கவில்லை என கூறப்படுகின்றது.

கொழும்பு 7, மகாகமசேகர மாவத்தையில் உள்ள இல்லம், சம்பந்தன் இறந்து சுமார் மூன்று மாதங்கள் கடந்துள்ள போதிலும் இதுவரை அரசிடம் ஒப்படைக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இல்லம் அமைச்சரவையின் ஒப்புதலுடன் அவரது பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டது. இந்த வாசஸ்தலத்தை மீண்டும் அரசாங்கம் பெற்றுக்கொள்வதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை முன்னாள் அமைச்சர் தினேஸ் குணவர்தனவிடம் அமைச்சு அண்மையில் கையளித்த போதிலும், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து அந்த தீர்மானம் நிறுத்தப்பட்டது.

இதையடுத்து, புதிய அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் இதற்கான பத்திரத்தை கையளிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை 2015ஆம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தர் பதவியேற்றதன் பின்னர் சம்பந்தனுக்கு இந்த உத்தியோகபூர்வ இல்லம் கிடைத்தது. அதன் பின்னர் 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் 26 ஆம் திகதி மகிந்த ராஜபக்ச மீண்டும் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு வந்த போதும், சம்பந்தனுக்கு அந்த உத்தியோகபூர்வ இல்லத்தில் தொடர வாய்ப்பளித்தார்.

இந்த உத்தியோகபூர்வ இல்லத்தின் நீர்க் கட்டணம், மின்சாரக் கட்டணம், தொலைபேசி கட்டணம், பராமரிப்புச் செலவுகள் என்பன அரசாங்கத்தினால் ஏற்கப்படுவதாக கூறப்படுகின்றது.

அதோடு , இந்த உத்தியோகபூர்வ இல்லத்தின் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் ஊழியர்களின் சம்பளம் அரசாங்கத்தினால் செலுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை 2017 ஆம் ஆண்டு அந்த வீட்டின் பழுதுபார்க்கும் பணிக்காக மூன்று கோடியே ஐம்பது லட்சம் ரூபாய் செலவிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரா.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்து இறக்கும் வரை எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே வாழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.