இலங்கை வரும் சர்வதேச நாணய உயர்மட்ட குழு!

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் தலைமையிலான உயர்மட்ட குழு இன்றைய தினம் இலங்கை வரவுள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்த உயர்மட்ட குழு நாளை மறுதினம் வரை நாட்டில் தங்கியிருக்கும் என சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த விஜயத்தின் போது, சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டக்குழு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் புதிய பொருளாதாரக் குழுவைச் சந்தித்து இலங்கையின் அண்மைய பொருளாதார அபிவிருத்திகள் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கை தொடர்பில், குறித்த குழுவினருடன் கலந்துரையாடப்படமாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்துரைத்த அமைச்சர் விஜித ஹேரத், சர்வதேச நாணய நிதிய திட்டத்தினை தொடர்ந்தும் முன்னெடுப்பது குறித்து மதிப்பீடுகள் இடம்பெறும் என குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் இந்த மாத இறுதியில் நியூயோர்க்கில் இடம்பெறவுள்ள கூட்டத்தின் போது சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டம் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.