தற்கொலைக்கு முயன்ற பெண்ணின் உயிரை காப்பாற்றிய பொலிஸ் சார்ஜன்ட்

மன்னார் போக்குவரத்து பிரிவு பொலிஸ் சார்ஜன்ட்  மலலசேகர (41308) வின் துரித நடவடிக்கையின் காரணமாக மன்னார் பிரதான பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (29) காப்பாற்ற பட்டதாக தெரிய வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை  (29) காலை மன்னார் நகருக்குள் நுழையும் பிரதான பாலத்திற்கு அருகில் உள்ள அலுவலகத்தில் பிரதேச போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் சார்ஜன்ட்  மலலசேகர பணிபுரிந்து கொண்டிருந்த போது பெண் ஒருவர் கையில் கடிதம் போன்ற ஒன்றை எடுத்துக் கொண்டு வந்துள்ளார்.

பின்னர் குறித்த யுவதி குறித்த பொலிஸ் அதிகாரியிடம்  தமிழ் தெரியுமா? என கேட்டுள்ளார். அதற்கு  சார்ஜன்ட் நீங்கள் யார் என்று தமிழில் கேட்க அந்தப் பெண், தன் கையில் இருந்த கடிதம் மற்றும் கையடக்கத் தொலைபேசியை பொலிஸ் சார்ஜென்ட்டின் மேசையில் வைத்துவிட்டு மன்னார் பாலம் நோக்கி ஓடியுள்ளார்.

சம்பவத்தை அவதானித்த பொலிஸ் சார்ஜன்ட் மலலசேகரன், குறித்த பெண் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக சந்தேகித்து துரத்திச் சென்றுள்ளார்.

அப்போது குறித்த பெண் பாலத்தின் பாதுகாப்பு சுவரில் ஏறி கடலில் குதிக்க தயாராகியுள்ளார். அந்தப் பெண் பாலத்தில் குதிக்கத் தயாரான நிலையில் மலலசேகர அந்தப் பெண்ணின் காலைப் பிடித்துக் காப்பாற்றினார்.

சார்ஜன்டினால் மீட்கப்பட்ட 24 வயதுடைய பெண் மன்னார் பொலிஸ் மகளிர் மற்றும் சிறுவர் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.