பாடசாலை நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைக்கத் தடை

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் வெளியானமை தொடர்பில் சுயாதீன விசேட நிபுணர்களின் ஒத்துழைப்புடன் விசாரணைகளை நடத்தி தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

கல்வி அமைச்சின் சகல பிரிவு பிரதானிகளுடனும் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பிரதமர் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.

வினாத்தாள் வெளியானதன் காரணமாக மாணவர்களுக்கு ஏற்பட்ட அநீதிக்கு விரைவில் நியாயம் கிடைக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இதுவரை தாமதமான சகல பரீட்சைகளினதும் பெறுபேறுகளை விரைவில் வெளியிடுமாறு அவர் பரீட்சைகள் திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அரசியல்வாதிகளைப் பாடசாலை நிகழ்வுகளுக்காக அழைப்பதை நிறுத்துமாறும் பிரதமர் ஹரிணி அமரசூரிய பணிப்புரை விடுத்துள்ளார்.