இஸ்ரேல் தாக்குதலில் 100 இற்கும் மேற்பட்டோர் பலி

லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தொடர்ச்சியாக ரொக்கெட் தாக்குதல் நடத்துவதும், இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுப்பதும் தொடர்கிறது. நேற்றும் தாக்குதல் நடத்தப்பட்டது. வடக்கு இஸ்ரேலின் உள்பகுதியில் 100 இற்கும் மேற்பட்ட ரொக்கெட்டுகளை ஹிஸ்புல்லா அமைப்பினர் ஏவினர். இஸ்ரேல் தரப்பில் இருந்தும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்நிலையில், லெபனான் மீது இஸ்ரேல் இன்று சரமாரியாக குண்டுமழை பொழிந்தது. சுமார் 300 இடங்களை குறிவைத்து வான் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் கூறியுள்ளது. 

தாக்குதலில் 100 பேர் கொல்லப்பட்டதாகவும், 400 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் லெபனான் சுகாதார அமைச்சு கூறியுள்ளது. 

ஒக்டோபர் மாதம் தொடங்கிய மோதலுக்குப் பிறகு லெபனானில் நடத்தப்படும் மிக உக்கிரமான தாக்குதல் இதுவாகும்.

இந்த தாக்குதல் தொடர்பாக இஸ்ரேல் இராணுவம், சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது. லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இலக்குகள் மீதான தாக்குதல்களுக்கு இராணுவ தளபதி ஹெர்சி ஹலேவி ஒப்புதல் அளித்திருப்பதாகவும், இன்று 300 இற்கும் மேற்பட்ட ஹிஸ்புல்லா இலக்குகள் தாக்கப்பட்டதாகவும் அதில் கூறியுள்ளது.

எதிர்வரும் நாட்களில் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க உள்ளதாக ஹெர்சி ஹலேவி மற்றும் பிற இஸ்ரேல் தலைவர்கள் கூறியுள்ளனர்.