பாராளுமன்ற வாக்கெடுப்பில் வெற்றிபெறாத சஜித்தால் தேர்தலில் எவ்வாறு வாக்குகளை பெற முடியும்!

பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது கூட, தன்னால் வெற்றி பெற முடியாது என்று பின்வாங்கிய சஜித் பிரேமதாசவால் எவ்வாறு மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்ள முடியும்? ஏனையோருக்கு வாக்களித்து பரிசோதிப்பதற்கான சோதனைக் காலம் இதுவல்ல என்பதால் மக்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் மீண்டும் நாட்டை ஒப்படைக்க வேண்டும் என பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார்.

கொழும்பில் புதன்கிழமை (18) இடம்பெற்ற இறுதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதன் பின்னர் ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில் சஜித் பிரேமதாச போட்டியிடுவதாகக் கூறினாலும், பின்னர் டலஸ் அழகப்பெருமவே களமிறக்கப்பட்டார்.

பாராளுமன்றத்தில் கூட தன்னால் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக அதிக வாக்குகளைப் பெற்றுக் கொள்ள முடியாது எனத் தெரிந்து கொண்டு தான், அன்று சஜித் பின்வாங்கினார். அவ்வாறான ஒருவரால் எவ்வாறு நாட்டு மக்களில் பெரும்பான்மையானோரின் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற முடியும்?

இவ்வாறான நெருக்கடிகள் ஏற்படும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் சஜித் பிரேமதாச பயந்து ஓடினார். மறுபுறம் அநுரகுமார திஸாநாயக்க பாராளுமன்ற வாக்கெடுப்பில் 3 வாக்குகளை மாத்திரமே பெற்றுக் கொண்டார். அவரால் எவ்வாறு நாட்டை நிர்வகிக்க முடியும்? ஒரு சட்டத்தைக் கூட அவரால் நிறைவேற்றிக் கொள்ள முடியாது.

எனவே இவ்வாறானவர்களுக்கு வாக்களித்து பரிசோதித்துப் பார்க்க வேண்டாம். காரணம் இது பரிசோதனைக்கான காலம் அல்ல. எனவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களித்து மீண்டும் அவரிடம் நாட்டைக் கையளிக்க வேண்டும் என்றார்.